செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Wednesday, December 31, 2014

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 

                                                    இந்த ஆண்டு அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமியின் அருளாள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்க பெறுவோம்.





தென்னாட்டுடைய சிவனே போற்றி!         எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

Saturday, October 25, 2014

கந்த ஷஷ்டி விரதம்



                  முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.

முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.

விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.


விரத பலன்

ஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

Thursday, October 9, 2014

ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா

கொடியெற்றம்


   நமது திருகோயிலில் 10/10/2014 - வெள்ளிகிழமை காலை 7.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியெற்றம் நடைபெறும்.
வருகின்ற 18/10/2014 அன்று காலை 8.05 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெறும்.
21/10/2014 அன்று மாலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும்.
                        அனைவரும் வருக! அம்பிகையின் அருள் பெறுக!

Tuesday, July 22, 2014

ஆடி பூர வளைகாப்பு திருவிழா

                           நமது திருக்கோவிலில் ஆடி மாதம் 14 தேதி மாலை (30.07.2014) அருள்மிகு செண்பகவல்லியம்பிகைக்கு ஆடிபூரவளைகாப்பு திருவிழா நடைபெற உள்ளது.








                                  

அனைவரும் வருக! அம்பிகையின் அருள் பெறுக!


ஆடிப் பூர தினத்தில் அம்பிகையை தரிசனம் செய்வோம் !
ஆனந்தமான நல்வாழ்வு பெற்றிடுவோம் !!

Monday, July 21, 2014


                 அனைவரும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல்
                             ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிய
                                                            "கந்தர் அநுபூதி"







                                காப்பு

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

                                  நூல்

(1) ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.

(2) உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.

(3) வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.

(4) வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

(5) மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

(6) திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

(7) கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

(8) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.

(9) மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.

(10) கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

(11) கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.

(12) செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

(13) முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

(14) கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

(15) முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

(16) பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.

(17) யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.

(18) உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.

(19) வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

(20) அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.

(21) கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.

(22) காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.

(23) அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே

(24) கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.

(25) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

(26) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

(27) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.

(28) ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

(29) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

(30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

(31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

(32) கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.

(33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.

(34) சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.

(35) விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.

(36) நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.

(37) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

(38) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

(39) மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.

(40) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.

(41) சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.

(42) குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

(43) தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

(44) சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.

(45) கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே.

(46) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.

(47) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

(48) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

(49) தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

(50) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

(51) உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

முருகா சரணம்!

Thursday, April 17, 2014

செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா


திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்



செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தெப்பத்திருவிழா


11-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில், தெப்ப திருவிழா நடந்தது. தெப்பத்தில் 300-க்கு மேற்பட்ட டேங்கர் லாரிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. தெப்பத்தை சுற்றிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா சென்று, அடைக்கலம்காத்தான் மண்டபத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

பின்னர் மெயின் ரோடு, தெற்கு பஜார் வழியாக சுவாமி- அம்பாள் தெப்பத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து சுவாமி- அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி, 9 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது முதல் 3 சுற்றுகளுக்கு மங்கள வாத்தியங்களும், அடுத்த 3 சுற்றுகளுக்கு வேத பாராயணமும், இறுதி 3 சுற்றுகளுக்கு தேவார இன்னிசையும் பாடப்பட்டது. செஞ்சுரி பட்டாசு அதிபர் கணேஷ்பாபு ஏற்பாட்டில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்


திரளான பக்தர்கள் தரிசனம்


செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஏப்.14- பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிகழ்ச்சியான தேரோட்டம் கம்மவார் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

காலை 8 மணிக்கு சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர். 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மூப்பன்பட்டி மாடசாமி குடும்பத்தினர் தேர் தடி போட்டனர். 


திரளான பக்தர்கள், செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வந்தது. காலை 10 மணிக்கு தேர் நிலையத்தை வந்தடைந்தது.

தேரோட்டத்தில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கம்மவார் சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் வேல்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

தீர்த்தவாரி- தெப்ப திருவிழா

திங்கட்கிழமை ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.

Monday, April 7, 2014

பங்குனித் திருவிழா கொடியேற்றம்

அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 10 மணியளவில் கொடிப்பட்டம் மாடவீதி, ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் கொடி பட்டத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 10.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
பின்னர் நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றுக்கு 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுப்புராஜ், அதிமுக நகரச் செயலர் சங்கரபாண்டியன், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், தொழிலதிபர்கள், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் மற்றும் மண்டகப்படிதாரர் சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனித் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக மாலை 4 மணியளவில் திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப் பணிவிடை ஸ்ரீபலிநாதர் அஸ்திரத்தேவர் திருவீதியுலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா வந்தனர்.  திருவிழாவின் முக்கிய திருநாளான தேரோட்டம் இம்மாதம் 13-ம் தேதி காலை 8 மணிக்கு கம்மவார் சங்கம் மண்டகப்படிதாரர்கள் சார்பில் நடைபெறும். 14-ம் தேதி மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனை, யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதீயுலா நடைபெறுகிறது.  15-ம் தேதி கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழா நடைபெறும்

Friday, April 4, 2014

பங்குனித் திருவிழா

அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை (ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் 9-ம் திருநாளான ஏப்.13-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். 10-ம் திருநாளான திங்கள்கிழமை(ஏப்.14) தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 11-ம் திருநாளான செவ்வாய்க்கிழமை(ஏப்.15) தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, கோயில் பின்புறம் உள்ள மைதானத்தில் ராட்டினங்கள் உள்பட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

Thursday, February 27, 2014

அருள்மிகு ஆறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் உற்சவ மூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

அருள்மிகு ஆறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் உற்சவ மூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா








Add caption

Add caption



Sunday, February 23, 2014

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!




1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.
9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.
11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.
12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.
13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.
14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.
15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
16. இடது கையினால் ஜலம் அருந்தக்கூடாது.

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?


                            சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.



சிவரத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் திருநாமங்கள்:

1.ஸ்ரீ பவாய நம: 

2. ஸ்ரீ சர்வாய நம: 

3. ஸ்ரீ பசுபதயே நம: 

4. ஸ்ரீ ருத்ராய நம: 

5. ஸ்ரீ உக்ராய நம: 

6. ஸ்ரீ மகாதேவாய நம: 

7. ஸ்ரீ பீமாய நம: 

8. ஸ்ரீ ஈசாநாய நம:

Monday, January 27, 2014

அருள்மிகு ஆறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் உற்சவ மூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா


அருள்மிகு ஆறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் உற்சவ மூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

அழைப்பிதல்









 















Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!