செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Monday, November 8, 2010

ஐப்பசி தேரோட்டம்

செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கொடியேற்றம் முதல் ஒவ்வொரு நாளும் புஷ்ப சப்பரம், பல்லக்கு, காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், கிளிவாகனம் ஆகியவற்றில் சுவாமி அம்மன் பவனி வந்தனர். ஒன்பதாம் திருநாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடந்தது.


அதனை தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் மற்றும் 18 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகமும் பூஜைகளும் நடத்தப்பட்டு காலை 7.15 மணிக்கு ரதாரோகணம் என்ற அம்மன் திருத்தேருக்கும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் ஆர்டிஓ ரவிச்சந்திரன் மற்றும் தாசில்தார் கந்தசாமி ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து தேர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையில் நின்றது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர்கள் திருப்பதிராஜா, ராமர், பீக்கிலிபட்டி முருகேசன் கோயில் நிர்வாக அதிகாரி இளையராஜா, வணிக வைசிய சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் பழனிகுமார், பொரு ளாளர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா



செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த மாதம் 30ம் தேதி தேரோட்டம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் காலை 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், காலை 7 மணிக்கு உற்சவர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், காலை 11 மணிக்கு தெப்பத்தில் தீர்த்தவாரி அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

கோயில் நிர்வாக அலுவலர் இளையராஜா, அறங்காவலர்குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் திருப்பதிராஜா, சுந்தரராஜ பெருமாள் கோயில் டிரஸ்ட் தலைவர் டாக்டர் கௌரிசங்கர், திருப்பணிக்குழு உறுப்பினர் மாரியப்பன், மண்டகபடிதாரர் முடுக்குமீண்டான்பட்டி ஆவுடையப்பன் செட்டியார் குடும்பத்தினர், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் மாரிமுத்து உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர்கள் திருப்பதிராஜா, ராமர், முருகேசன், ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

பாலாலயம் வைபவம்

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ராஜகோபுர திருப்பணி முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பாலாலயம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் ஸ்ரீ பூவனநாத சுவாமி சன்னதி முன் 97 அடி உயர ராஜகோபுரம் அமைக்கும் பணி 1999-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இக் கோயிலில் மூலவர் பூவனநாத சுவாமி, அருள்மிகு செண்பகவல்லி அம்பாள், கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி ஆகிய 6 விமான கலசங்களையும், அம்பாள் சன்னதி முகப்பு சாலகார கோபுரப் பணியும் புதுப்பித்து, உபயதாரர்கள் மூலம் திருப்பணி செய்ய வேண்டியுள்ளதால், 6 விமான கலசங்கள் மற்றும் அம்பாள் சன்னதி சாலகார கோபுரத்தினையும், பாலாலயம் செய்யும் வைபவம் புதன்கிழமை மாலை சுமார் 5 மணிக்கு மேல் நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பாலாலயம் செய்யும் வைபவம் பரசுராம பட்டர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி இளையராஜா, கோவில்பட்டி டி.எஸ்.பி. மீனா, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, திருப்பணிக் குழுத் தலைவர் நாகஜோதி, அறங்காவலர் திருப்பதிராஜா, திருப்பணிக் குழு கமிட்டி உறுப்பினர்கள் திலகராஜ் ஆறுமுகச்சாமி, ஜெயராமன், கருப்பசாமி, மாரியப்பன், கம்மவார் சங்கத் தலைவர் துரைராஜ், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், கோயில் ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமை எழுத்தர் ராமலிங்கம் உள்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!